சிக்ஸர்களை குறிவைக்கும் தோனி: சிஎஸ்கே கேப்டன்
ஐபிஎல் போட்டிகளில் சிக்ஸர்களை குறிவைத்து தோனி ஆடவுள்ளதாகவும், அவரின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் உள்ளதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் ஜெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பா் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மார்ச் 23) மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதனிடயே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தோனி குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தோனி குறித்து ருதுராஜ் பேசியதாவது,
''தோனி சென்னை அணியின் இம்பாக்ட் வீரர் தான். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அத்தனை வீரர்களும் உத்வேகம் பெறுகிறோம். அவர் பந்துகளை அடிக்கும் அளவுக்கு, எங்களால் கூட அடிக்க முடியவில்லை. 43 வயதில் அணிக்காக அவர் செய்து வரும் பணிகள் பாராட்டுக்குரியவை.
எவ்வளவு அதிகமாக சிக்ஸர்கள் அடிக்கலாம் என்பதில்தான் அவர் கவனம் செலுத்துகிறார். அவரின் உடல்நிலை முன்பைவிட குறைந்ததாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை'' எனக் குறிப்பிட்டார்.
தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
''அது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இந்த ஆண்டின் பந்துவீச்சுத் தாக்குதல் எதிரணிக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அணிக்கு சிறந்தது எது?, எந்த இணை சிறப்பாக இருக்கும் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல.
தொடக்க வீரர்களின் இணை முந்தைய ஆட்டங்களை போன்று இருக்கும். எங்கள் அணியில் அனைவரும் முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடியவர்கள்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சென்னையின் சுழலை சமாளிக்குமா மும்பை?: இன்று மோதல்