தமிழகத்தில் 160 கி.மீ. அதிவேக ரயில் சேவை: திட்ட அறிக்கைக்கு டெண்டர் வெளியீடு!
பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!
பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தங்கி வேலை செய்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்த வீரகாளி( 40).
இவர் நேற்று(மார்ச் 23) வழக்கம்போல பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியில் இருந்தபோது, லாரி ஒன்று பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளது. அப்போது பெட்ரோல் நிரப்பும் பகுதி அருகே மோதுவதுபோல் வந்ததால் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரை திட்டி உள்ளனர்.
அப்போது இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து சென்ற லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் லாரியை சாலையில் நிறுத்திவிட்டு, பின்னர் மது அருந்தி உள்ளனர்.
மது போதையில் லாரியின் சக்கரத்தை கழற்றப் பயன்படும் இரும்பு ராடையும் ஒரு இரும்பு கம்பியையும் எடுத்துக்கொண்டு மீண்டும் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனர்.
அப்போது வீரகாளி தூங்கிக் கொண்டிருந்துள்ள நிலையில், அவரை இருவரும் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்தம் அதிகமாக வெளியேறி வீரகாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க: நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?
இதனையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிந்தவுடன் கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உளவு பிரிவு காவலர் நிதி குமார் ஆகியோர் லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனரை பிடிக்கச் சென்றனர்.
அப்போது, லாரி ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (31) ஆகிய இருவரும் போலீஸார் இடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்தது.
இவர்களைப் பிடித்த போலீஸார், அரசூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.