மணிப்பூர் சோகம்: `படிப்படியாக நாங்கள் மறக்கப்பட்டோம்' - 2 ஆண்டுகள் முடிந்தும் தொ...
சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!
சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கு செலுத்தியதைக் காண முடிந்தது. அங்குள்ள நேரப்படி இரவு 8 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
சிங்கப்பூரில் கடந்தகால தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது, தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் நள்ளிரவிலோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரை பொருத்தவரை அனைவரும் வாக்கு செலுத்துவதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 27.60 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குச் சீட்டுகளால் சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 97 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையாக உள்ளது.
ஜனநாயக தேசமான சிங்கப்பூர், மக்கள் செயல் கட்சியின்(பிஏபி) கோட்டையாக திகழ்கிறது. அக்கட்சியே கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் லாரன்ஸ் வாங்க் பிரதமராகப் பதவி வகிக்கிறார்.
சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிஏபி கட்சி ஆட்சியில் நீடிக்கிறது.
வெளிப்படையான அரசு நிர்வாகமும், சிங்கப்பூரின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியும் பிஏபி கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிஏபி கட்சியின் வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 61 சதவீதமாகச் சரிந்தது. எதிர்க்கட்சியான உழைப்பாளர் கட்சி கடந்த முறை 10 இடங்களைக் கைப்பற்றி, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்திருந்தது.
இந்த நிலையில், இம்முறையும் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்பதே களநிலவரம். எனினும், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பரிசோதனையாகவே இத்தேர்தல் அமைகிறது.