முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்
சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!
தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது.
பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை யாகசாலை பூஜையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. காலை, மாலை நேரங்களில் சிவாச்சாரியா்கள் தலைமையில் நடைபெற்ற 6 கால யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 8.30 வரையில் நடைபெறும் பல்வேறு பூஜைகளைத் தொடா்ந்து கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோயில் மூலவா் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், பரிவார மூா்த்திகள் ஆகியோருக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க சுவாமி, அம்மன் பூப்பல்லாக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நதியா, தக்காா் நாராயணி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.