நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
சிறுநீரகப் பிரச்னையுடன் தமிழக விவசாயிகள்; எச்சரிக்கும் சர்வதேச மருத்துவ இதழ்!
அரை நூற்றாண்டுக்கு முன்புவரை நீரிழிவு, புற்றுநோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களை மிக மிகக் குறைவாகத்தான் கண்டு வந்தோம்.
ஆனால், இப்போதோ இந்த வாழ்வியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடையே அதிகரித்துவிட்டார்கள். இந்த நிலைமையை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டு, இப்போது நார்மலைஸ் ஆகிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில்தான், உலகின் பழைமையான, நம்பகமான சர்வதேச மருத்துவ இதழான 'தி லான்சென்ட்', தமிழகத்தில் 5.13 சதவிகித விவசாயிகளுக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கிறது என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, இவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வேறு எந்த இணை நோய்களும் இல்லை. தொடர்ந்து வெயிலில் நின்று வேலைபார்ப்பதால், சிறுநீரகப் பிரச்னை வந்திருக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.
2023-ல் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை சார்பில், தமிழக விவசாயிகளிடையே இரண்டு கட்டங்களாக ஒரு கள ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 125 கிராமங்களைச் சேர்ந்த, நிலத்தில் இறங்கி வேலைபார்க்கும் 3,350 விவசாயிகளின் சிறுநீரக செயல் திறன் எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. முதல் கட்ட ஆய்வில் 17.43 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக செயல்பாடுகளில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது.

மூன்று மாதங்கள் கழித்து நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ஆய்வின்போது, இந்தப் பிரச்னையின் அளவு 5.13 சதவிகிதமாக குறைந்திருந்தது. இவர்களுக்கும்கூட, வேறு எந்த இணை நோய்களும் இல்லை எனவும், நேரடி வெயிலில் தொடர்ந்து நிற்பதால்தான் சிறுநீரக பிரச்னை ஏற்பட்டிருக்கும் எனவும், இந்த கள ஆய்வுகளை நடத்திய மாநில உறுப்பு மாற்று ஆணையச் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் 'தி லான்செட்' மருத்துவ இதழ், தமிழக விவசாயிகள் மத்தியில் சிறுநீரக செயல்திறன் பாதிப்பு இருக்கிறது என்கிற தன்னுடைய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
ஜங்க் ஃபுட்ஸ், பாக்கெட் செய்யப்பட்ட உணவுப்பொருள்களில் இருக்கிற அதிகப்படியான உப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிற நிலையில், நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்களுக்கும், நீண்ட நேரம் வெயிலில் வேலைபார்ப்பவர்களுக்கும்கூட உடலின் நீர்ச்சத்துக் குறைந்து, அதன் காரணமாக சிறுநீரகப்பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த ஆய்வறிக்கை, எச்சரிக்கை மணியாக நமக்கெல்லாம் தெரியப்படுத்தியிருக்கிறது.
நம்முடைய மாநிலத்தைப் பொறுத்தவரை வெயில் காலங்களே அதிகம். விவசாயிகள் மட்டுமல்லாது, டிராஃபிக் போலீஸில் ஆரம்பித்து கட்டுமானத்தொழிலாளர்கள் வரைக்கும் பலரும் நீண்ட நேரம் திறந்த வெளியில் வெயிலில் நின்றுதான் வேலை பார்த்து வருகிறார்கள். இதுபோன்ற பணிச்சூழலில் இருப்பவர்கள் உடலில் இருந்து வெளியேறும் நீருக்குத் தக்க நிறைய நீர் அருந்துவது மட்டுமே இப்போதைக்கு இதற்கான தீர்வு.
















