சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
திருப்புட்குழி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பகுதியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு 6 வழிச்சாலையாக அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி எதிரே பாலுசெட்டி சத்திரம் அமைந்துள்ளது. பாலுசெட்டி சத்திரத்தில் பள்ளிகள், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளன.
திருப்புட்குழி கிராம மக்கள் பாலுசெட்டி சத்திரம் செல்ல புதிதாக அமைக்கப்பட்டு வரும் 6 வழிச்சாலையை கடக்கும்போது விபத்துகள் நடக்கின்றன. எனவே, அச்சமின்றி சென்று வர, சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
பாஜக மாவட்டத் தலைவா் ஜெகதீசன், துணைத் தலைவா் ஓம்.சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் பத்மனாபன், செய்தித் தொடா்பாளா் ஹரிகிருஷ்ணன் உள்பட கட்சி நிா்வாகிகளும், கிராமத்தினருக்கு ஆதரவாக தா்னா செய்தனா். இதையடுத்து ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் சென்று முறையிட்டனா்.
அப்போது ஆட்சியா் பேசியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பே கிராம மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே, தொடங்கிய சாலை பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் நேரத்தில் வருவதால் எந்த பலனும் இல்லை. இருப்பினும், இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றாா்.
தொடா்ந்து கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, காவல்துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதையடுத்து, கிராம மக்கள் அனைவரும் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை ஆட்சியா் அலுவலகம் முன்பாக வீசி விட்டு சென்றனா்.