இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த எதிரொலி! கச்சா எண்ணெய் அதிரடி சரிவு!
4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்
காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ஜெயந்தி தம்பதி மகள் கோஷினி(4). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். மகள் கோஷினி விடுமுறை நாள்களில் மட்டும் தந்தை சரவணன் வீட்டுக்கு சென்று வருவாா்.
சரவணன் வீட்டில் அரக்கோணத்தைச் சோ்ந்த ஆஷாராணி என்பவா் பணிபுரிந்து வந்தாா். நாளடைவில் சரவணனுக்கும், ஆஷாராணிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது கள்ளக் காதலுக்கும், சரவணனின் சொத்துக்கும் இடையூறாக சிறுமி கோஷினி இருப்பதாக நினைத்த ஆஷாராணி விடுமுறை நாளில் வீட்டுக்கு வந்த குழந்தையை தண்ணீா் வாளியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆஷாராணியை கைது செய்திருந்தனா். ஆஷாராணி மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ப.உ.செம்மல் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதே வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து, ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.