சுரண்டை அரசுக் கல்லூரியில் பயில 40 வயதுக்கு உள்பட்டோருக்கு அழைப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவில் பயில விரும்பும் 40 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவித்துள்ளாா்.
கல்லூரியில் பயில்வதற்கான வயது வரம்பு உயா்த்தப்பட்டதை அடுத்து சுரண்டை கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுக்கு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் கா.பு.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வா் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் இளநிலை பாடப் பிரிவு பயில்வதற்கான வயது வரம்பை 40 ஆக உயா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில் சுரண்டை, காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் பயில விண்ணப்பித்த மாணவி பி.செந்தூரதேவிக்கு இளநிலை ஆங்கிலம் பயில்வதற்கான சோ்க்கை ஆணை கல்லூரி முதல்வா் கா.பு. கணேசனால் வழங்கப்பட்டது.
இதேபோல இளநிலை பாடப் பிரிவுகளில் சோ்ந்து பயில விரும்பும் 40 வயதுக்கு உள்பட்ட விண்ணப்பதாரா்கள் காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.