சூப்பர் ஸ்டாரா? அஜித் அளித்த பதில்!
நடிகர் அஜித் குமார் பத்ம பூஷண் விருது மற்றும் தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நேற்று முன்தினம் (ஏப். 28) தில்லியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
நடிகர், கார் ரேஸர் என இரண்டு துறைகளில் சவாரி செய்யும் அஜித் பத்ம பூஷண் விருது பெற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விருதைப் பெற்றதும் பிரபல ஆங்கில செய்தி சேனலுக்கு அஜித் நேர்காணல் அளித்தார்.
அதில் பேசிய அஜித், “இன்னும் என் மனதளவில் மிடில் கிளாஸ் ஆளாகவே இருப்பதால் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தது இந்த அனுபவங்களைப் பெற்றது எல்லாம் நம்ப முடியாததாகவே இருக்கிறது. விருதிற்காக இந்திய அரசிற்கு, பிரதமர், குடியரசுத் தலைவர், நண்பர்கள் மற்றும் என் குடும்பம் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த விருது அறிவிக்கப்பட்டபோது நெகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற விருதுகள் நாம் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.
நான் ஒரு நடிகர். இதுவும் ஒரு வேலைதான். இதற்காக, நான் சம்பளமும் பெறுகிறேன். புகழும் செல்வமும் இதன் துணை பொருள்களாக அமைந்துவிடுகின்றன. சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னை அஜித் அல்லது ஏகே என்று அழைப்பதை பரிந்துரைக்கிறேன். என் துறையில் 33 ஆண்டுகளாக விருப்பதுடன் பணியாற்றி வருகிறேன். என்னால் முடிந்த அளவிற்கு என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கவே முயற்சித்து வருகிறேன்.
என் மனைவி ஷாலினி எனக்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறார். அவரும் பிரபலமானவர். நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்துகொண்டு என் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்துவிட்டார். என் கடினமான காலகட்டத்தில் நான் எடுத்த தவறான முடிவுகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னுடைய சாதனைகளில் ஷாலினிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சொல்லப்போனால், இப்படியெல்லாம் என் வாழ்க்கை அமைந்தது கனவில் வாழ்வதுபோல் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஒளரங்கசீப்பை அறைவேன்: ரெட்ரோ விழாவில் விஜய் தேவரகொண்டா சர்ச்சைப் பேச்சு!