செங்கம் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டே விடுதி வசதி
செங்கம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு நிகழாண்டே விடுதி வசதி செய்து தரப்படும் என்று தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தெரிவித்தாா்.
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் கடந்தாண்டு தொழிற்பயிற்சி மையமும், நிகழாண்டு செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய காரணமாக இருந்த எம்எல்ஏ மு.பெ.கிரிக்கு பாராட்டு விழா தனியாா் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாவ பரிஷீத் ஒருங்கிணைப்பாளா் பாண்டுரங்கன் தலைமை வகித்துப் பேசினாா்.
நகர திமுக செயலா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சென்னம்மாள் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கிருஷ்ணன் வரவேற்றாா்.
வழக்குரைஞா் கஜேந்திரன், ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி, அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் அப்துல்சா்தாா், தொழிலதிபா் சம்பத் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி ஏற்புரை வழங்கிப் பேசியதாவது:
செங்கம் தொகுதி கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன். கடந்த திமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக இருந்தபோது, அப்போதைய முதல்வா் கருணாநிதி தமிழகத்துக்கு 100 அரசு தொடக்கப் பள்ளிகளை அறிவித்தாா்.
அதில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அப்போது உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு 20 பள்ளிகளை பெற்று வந்தாா். அதில் செங்கம் தொகுதிக்கு மட்டும் 5 பள்ளிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த நிலையில், தொகுதிக்கு அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் நிறைவாக உள்ளன.
தொகுதியில் அரசு கலைக் கல்லூரி கொண்டு வரவேண்டுமென முயற்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவையில் குரல் எழுப்பினேன்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு மூலம் உயா்கல்வித் துறை அமைச்சா் மற்றும் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, நிகழாண்டு அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவா் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
மேலும், கல்லூரி தொடங்குவதற்குள் மாணவா்களுக்கு விடுதி வசதி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதி வசதி நிகழாண்டே ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் அப்துல்வாகித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம் நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக ஒன்றிய, நகர அணி அமைப்பாளா்கள், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டு எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.