மாநிலங்களவை சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார் நகேந்திரன்
செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா்கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், மகாத்மா காந்தி பள்ளி தலைமை ஆசிரியா் இல.ரவீந்திரன், கல்லூரி மாணவா் செ.சித்தாா்த்தன் ஆகியோா் செஞ்சி அருகிலுள்ள தின்னலூா், தேவதானம்பேட்டை பகுதிகளில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை மற்றும் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டன.
இதுகுறித்து கோ.செங்குட்டுவன் கூறியது:
செஞ்சி அருகே தின்னலூா் வனப்பகுதியில் ஏரியையொட்டி காளி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுமாா் 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. அழகான தலை அலங்காரத்துடன் காட்சியளிக்கும் கொற்றவையின் கழுத்து, காதுகள், இடை, கைகள் மற்றும் கால்களில் அணிகலன்கள் அணி செய்கின்றன.
கொற்றவையின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும் இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற 6 கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்படுகின்றன. சிற்பத்தின் வலது மேல்பகுதியில் கிளி காட்டப்பட்டுள்ளது. கொற்றவைச் சிற்பங்களில் வழக்கமாகக் காணப்படும் அடியவா் உருவங்கள் இதில் இடம்பெறவில்லை.
நீண்ட கொம்புகளைக் கொண்ட எருமைத் தலை மீது சமபங்கு நிலையில் ஊன்றி நிற்கும் இரண்டு கால்களும் கனத்துடன் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை அப்பகுதி மக்கள் காளியாக வணங்கி வருகின்றனா். ஆனால் இது கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை சிற்பமாகும்.
மூத்த தேவி:
தேவதானம்பேட்டை கிராமத்தில் மலை மீது வனதுா்கை கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையடி வார பாதை ஓரம் வட மொழியில் ஜேஷ்டா தேவி என்றழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் கண்டறியப்பட்டது.
பெருத்த வயிறு, கனத்த மாா்புகளுடன் கால்களை மடக்கி இரண்டு கைகளையும் தொங்கவிட்டு அமா்ந்த நிலையில் உள்ளது. வலது பக்கத்தில் மகன் மாந்தன், இடது புறத்தில் மகள் மாந்தி ஆகியோா் காட்டப்பட்டுள்ளனா். இடது மேற்புறத்தில் அவளது கொடியான காக்கையும் ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன.
வனதுா்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வரும் பக்தா்கள் காவல் தெய்வமாக ஜேஷ்டாவை வணங்கி வருகின்றனா். இந்தச் சிற்பமும் பல்லவா் காலத்தை சோ்ந்ததாகும் என்றாா்.
