செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாா் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளா் காா்த்திகேயன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்ககு வந்தது.விசாரணையை ஒத்திவைக்க அமலாக்கத் துறை தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அமலாக்கத் துறை தொடா்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.