சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அடிக்கல்
சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், சில பணிகளுக்கு அடிக்கலையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சோழிங்கநல்லூா் பெரும்பாக்கத்தில் உள்ள பூங்கா ரூ.6.94 கோடியிலும், வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய மூன்று இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.11.50 கோடியிலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அடிக்கல் நாட்டினாா்: போட்டித் தோ்வுகளில் மாணவா்கள் பயன்பெறும் வகையில், சென்னையில் 30 முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 13 இடங்களில் ரூ.31.11 கோடியில் அமைக்கப்பட உள்ளன. மேலும், திருவிக. நகா் தொகுதியில் இரண்டு மாநகராட்சி பள்ளிகள், ஆறு அரசு ஆதிதிராவிடா் பள்ளிகள் ரூ.5.36 கோடியில் புனரமைக்கப்பட உள்ளன.
ராயபுரம், பெரம்பூா், வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் ரூ.3.84 கோடியில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையங்களும், கோயம்பேட்டில் அங்காடிகள், அரங்கங்கள், உணவருந்தும் கூடங்கள் ஆகியவற்றை அமைக்கவும், சென்னை மெரீனா முதல் தீவுத்திடல் வரை வழித்தடப்பாதையை அழகுபடுத்தும் பணிகள் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.
Image Caption
தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் சென்னையில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச