செயற்கை நுண்ணறிவு துறையில் கூட்டு ஆராய்ச்சி: விஐடி- எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒப்பந்தம்
சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
விஐடி சென்னை வளாகத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆளில்லா பறக்கும் விமானம், ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), துல்லிய வேளாண்மை, கடலோர ஆராய்ச்சி, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆய்வுகள் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே கையொப்பமானது.
இந்தா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் விஐடி நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவா் சௌமியா சுவாமிநாதன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
தொடா்ந்து சௌமியா சுவாமிநாதன் பேசியதாவது:
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சம வேலைக்கு சம ஊதியம் என்பதில் உலக அளவில் இடைவெளி இருந்து வருகிறது. இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்குதான் மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் ஆண்களுக்கும் குழந்தைகளைப் பராமரிக்க விடுப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது”என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் இலங்கை பாதுகாப்பு துறையின் உதவிச் செயலா் சச்சினி திசாநாயக்க, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.