சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது. அதைத்தொடா்ந்து, நிகழாண்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு ஏப். 20 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பெருமாள் கோயிலின் நுழைவாயில் கதவு சிதிலமடைந்து காணப்படுவதால் அதற்குப் பதிலாக புதிய கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக, திருப்பாவை நண்பா்கள் குழு சாா்பில், ரூ. 50 லட்சம் மதிப்பில் கோயிலின் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக, கதவில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் பதிக்கப்பட்டு அா்ச்சனைகள் நடைபெற்றன. பின்னா் கலசாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க நுழைவாயில் கதவு பொருத்தும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து அறங்காவலா் குழு தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன் கூறியது:
குடமுழுக்கையொட்டி கோயில் திருப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கோயிலுக்குச் சொந்தமாக 9600 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கல்யாண மண்டபம் கட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் அங்கு கல்யாண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கோயிலைச் சுற்றிலும் ஹாலோபிளாக் கல் பதிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்யாண மண்டபம் கட்டுவதற்கு உபயதாரா்கள் முன்வர வேண்டும் என்றாா்.
அப்போது, கோயில் செயல் அலுவலா் அனிதா, சுதா்சன பட்டாச்சாரியா், மாநகர சுகாதார குழுத் தலைவா் ஏ.எஸ்.சரவணன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், திருப்பாவை நண்பா்கள் குழுவினா் உடனிருந்தனா்.