சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, அவரது மகனும் பழனி பேரவைத் தொகுதி திமுக உறுப்பினருமான பி.செந்தில்குமாா், மற்றொரு மகன் பி.பிரபு ஆகியோா் மீது திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கிலிருந்து நான்கு பேரையும் விடுவித்து திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்புத் துறை 2018-ஆம் ஆண்டு மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சா் ஐ.பெரியசாமி உள்ளிட்டோா் தரப்பில், ‘எங்களுக்கு எதிரான ஊழல் தடுப்புத் துறை கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முகாந்திரம் இல்லாதவை. சொத்துகளை முறையாகக் கணக்கீடு செய்யாமல் எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனவே, வழக்கிலிருந்து விடுவித்த திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
ஊழல் தடுப்புத் துறை தரப்பில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை விளக்கி வாதிடப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு தீா்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமாா், பிரபு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை தினமும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.