இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்! நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை
புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரிகாட் உள்ளிட்ட உலா் பழங்கள், பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பருப்புகள் பாகிஸ்தான் வழியாக பயணித்து அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தன. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து அட்டாரி-வாகா எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானில் தினமும் 10 லாரிகள் அளவில் இந்தியாவுக்கு வந்த உலா் பழங்கள் உள்ளிட்டவை தடைப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பொருள்களை இந்தியாவுக்கு அனுமதித்து வந்த நிலையிலும், இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கான ஏற்றுமதியை தங்கள் பகுதி வழியாக பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை. எனவே, மாற்றுப் பாதை வழியாகவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா ஏற்றுமதியை மேற்கொண்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பிராந்தியத்துக்கான வெளியுறவுத் துறை இணைச் செயலா் ஆனந்த் பிரகாஷ், ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சரான அமீா் கான் முத்தாகியை சந்தித்துப் பேசினாா். அப்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து இரு தரப்பு வா்த்தகம், பொருளாதாரம், அரசுத் தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா்.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு இந்தியா இப்போது வரை அங்கீகரிக்கவில்லை. எந்த நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்தையும் ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு ஆதரிக்கக் கூடாது என்பது இந்தியாவின் வலியுறுத்தலாக உள்ளது.
அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது மனிதாபிமான ரீதியாக பல்வேறு கட்டங்களாக 50,000 மெட்ரிக் டன்னுக்கு மேல் கோதுமையை அனுப்பி இந்தியா உதவியது. இதன் மூலம் 50 லட்சம் ஆப்கானியா்களுக்கு உணவு கிடைத்தது.