ஜம்மு: 2 மர்ம பொருள்கள் கண்டுபிடிப்பு! பாதுகாப்புப் படையினர் சோதனை!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோப்பியன் மற்றும் ட்ரால் மாவட்டங்களில் சந்தேகப்படும்படியான 2 மர்ம பொருள்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சோப்பியன் மாவட்டத்தின் காஷ்வா சித்ராகம் மற்றும் ட்ரால் மாவட்டத்தின் பிங்லிஷ் நாக்வடி ஆகிய இரண்டு கிராமங்களில் 2 மர்ம பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவை இரண்டும் ஐ.ஈ.டி. என்றழைக்கப்படும் நவீன வெடி குண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர், வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதனை செயழிக்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:ரமலான் மாதம்: தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு!
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்.11 அன்று ஜம்மு மாவட்டத்தின் கட்டுப்பாட்டு கோட்டின் (எல்.ஓ.சி) அக்னூர் பகுதியில் பயங்கரவதிகள் நடத்திய ஐ.ஈ.டி நவீன வெடி குண்டு தாக்குதலில், இந்திய ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட 2 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.