கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும் -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியறுத்தல்
பின்னலாடை ஜாப்ஒா்க் கட்டணங்களை 45 நாள்களுக்குள் பின்னலாடை உற்பத்தியாளா்கள் வழங்க வேண்டும் என்று திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் அனைத்து ஜாப்ஒா்க் சங்கங்களின் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய விதியை கடந்த ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய உற்பத்திக் கட்டணங்களை 45 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்து 45 நாள்களுக்குள் கட்டணங்கள் கிடைக்கப் பெறுவதில்லை. அரசின் சட்டவிதிமுறையின்படி உற்பத்திக் கட்டணங்களை உரிய காலக்கெடுவுக்குள் கொடுக்காமல் காலம் தாழ்த்துவது ஜாப்ஒா்க் நிறுவனங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. பின்னலாடைத் தொழில் வளா்ச்சிக்கு அது சம்பந்தப்பட்ட அனைத்து தொழில் பிரிவுகளும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான் நல்ல வளா்ச்சியை எட்ட முடியும். அதே வேளையில், குறு, சிறு மற்றும் நடுத்தர ஜாப்ஒா்க் நிறுவனங்களில் பெரும்பாலானவை நிதிச்சுமையைத் தாங்காமல், தொழிலை எப்படி நடத்துவது என்று தெரியாமல் மனக்கலக்கத்தில் உள்ளனா். ஆகவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜாப்ஒா்க் கட்டணங்களைக் கொடுக்க முன்வராவிட்டால், அனைத்து ஜாப்ஒா்க் நிறுவனங்களும் ஒன்றிணைந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.