அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!
ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி
அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று(செப்.3) நடைபெற்றது. இதில், ஜிஎஸ்டி வரியை எளிமையாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிவித்தார்.
பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டு,ஜிஎஸ்டி வரியை 2 அடுக்குகளாக குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், 8 ஆண்டுகள் தாமதமானது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ளன.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா. சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாக வந்துள்ளது.
ஜிஎஸ்டி விகிதம் மற்றும் தற்போது வரை உள்ள வரிவிதிப்புகளை முதலில் அறிமுகப்படுத்திருக்கவே கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி நிலையை மாற்றவேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைகள் காதுகேளாதவர் காதில் விழுந்தது போல் இருந்தது.
வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது என்பதை ஊகிக்கவே ஆர்வமாக இருக்கும்.
நாட்டின் வளர்ச்சி மந்தமாக இருப்பதா?
வீட்டுக் கடன் அதிகரித்துள்ளதா?
சேமிப்பு குறைந்ததா?
பிகார் தேர்தல்?
டிரம்ப்பின் வரிவிதிப்பா?
மேற்கூறிய அனைத்தும்?” எனப் பதிவிட்டுள்ளார்.
அரசின் மீது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்குப் பிறகு சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என திரிணமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.