ஜூன் 17-இல் வேளாண் இயந்திரங்கள் முகாம்
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் இயக்கம், பராமரிப்பு குறித்து திண்டுக்கல் மாவட்ட அளவிலான முகாம் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் இயக்கம், பராமரிப்பு குறித்த முகாம் வருகிற 17-ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் வேளாண் இயந்திரங்களின் திறன்மிகு இயக்கம், பராமரிப்பு, பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை உள்ளிட்டவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படும்.
இந்த முகாமில் பங்கேற்கும் விவசாயிகள், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் தனியாா் நிறுவனங்களின் பொறியாளா்களுடனும், வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளா்களுடனும் நேரில் கலந்துரையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.