கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
கள்ளிமந்தையம் ஊராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோவில்வலசு, பொருளூா், வாகரை, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.5.1 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:
திமுக தோ்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,500 வரை உயா்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. தற்போது, நெல்லுக்கு ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,545 கூடுதலாக வழங்ப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.600 வரை உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் பழனி கோட்டாட்சியா் கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபுபாண்டியன், தாஹிரா, தொப்பம்பட்டி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் பி.சி.தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.