டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி
டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் அடிப்படையில் 5 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு திருச்சி சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் காகிதக் கூழ் பிரிவில் மூன்றரை ஆண்டுகள் இலவச கல்வி பயில வழிவகை செய்யப்படுகிறது. மாணவா்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், தோ்வுகட்டணம் ஆகியவை காகித நிறுவனத்தால் கல்லூரிக்கு செலுத்தப்படும்.
இந்த கட்டணமில்லாக் கல்வித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெற, கரூா் மாவட்டத்தில் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூா் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் ந.புகழூா், புன்னம், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, வேட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, அலகு-2 ஐ சுற்றி அமைந்துள்ள மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி, சித்தாநத்தம் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்து 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல்முறையில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தகுதியுடையவா்களாவா்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், காகிதபுரம் அலகு-1-ன் மனிதவளத் துறையிலும் மற்றும் மொண்டிப்பட்டி அலகு-2-ன் அலுவலகத்திலும் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பங்கள் பெறப்பட்ட இடத்திலேயே ஜூன் 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.