டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்கு தொடரச் சொன்னார்கள்: தியாகராஜன்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தன் பட பாடலைப் படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் திரைப்படம் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில், அப்படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற, “மலையூர் நாட்டாமை மனசைக் காட்டு பூட்டாம” பாடல் முக்கிய பங்கு வகித்திருந்தது. இப்பாடல் நடிகர் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கி, தயாரித்த மம்பட்டியான் படத்தில் தமன் இசையமைப்பில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது, “டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் என் படத்தின் பாடலை என்னிடம் அனுமதி கேட்காமலே பயன்படுத்திவிட்டனர். நண்பர்கள் பலரும் அப்படத்தின் மீது வழக்கு தொடரச் சொன்னார்கள். ஆனால், ஒரு படத்தின் வெற்றிக்கு உதவியதற்காக சந்தோஷம் படுகிறேனே தவிர வழக்கு தொடர்ந்து காசு பார்க்கும் எண்ணம் எனக்கில்லை. உண்மையில், என் பட பாடலை பிரபலமாக்கியதற்காக நான்தான் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார். தியாகராஜனின் இந்த பதிலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: தக் லைஃப் முதல் நாள் வசூல் எவ்வளவு?