புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
டெல்லி ஆசிரமத்தில் ரெய்டு: கல்லூரி மாணவிகள் 17 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு
டெல்லியைச் சேர்ந்த மதகுரு சுவாமி சைதன்யானந்தா என்று அழைக்கப்படும் பார்த்த சாரதி சொந்தமாக மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.
வசந்த் குஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் மேனேஜ்மெண்ட் என்ற கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பார்த்த சாரதி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பார்த்த சாரதி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, கண்ட இடத்தில் தொடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக மாணவிகள் போலீஸில் புகார் செய்துள்ளனர். இக்கல்லூரியில் 70 பேர் படித்து வருகின்றனர்.

பார்த்த சாரதி தெற்கு டெல்லியில் உள்ள தட்சிணாம்ய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்து வந்தார். கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்குப் பயிலும் மாணவிகளிடம் சாமியாரின் கோரிக்கையை நிறைவேற்றும்படி சொல்லி நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
அதோடு ஆசிரமத்தில் பணியாற்றும் வார்டன்கள் மாணவிகளை அழைத்துச்சென்று சாமியாரிடம் அறிமுகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 17 மாணவிகள் சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களும் சாமியாருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாமியார் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது சாமியார் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் அமித் கோயல் தெரிவித்தார். போலீஸார் ஆசிரமத்தில் ரெய்டு நடத்தியுள்ளனர்.

அதோடு அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாமியார் ஆக்ராவிற்குத் தப்பிச் சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆக்ராவிற்கு விரைந்துள்ளனர். சாமியாரின் கல்வி நிறுவனத்தில் ரெய்டு செய்தபோது ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் புகாரைத் தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரம தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.