'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம்: சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரிப்பு
சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடா்வதால் ஈரோடு மாவட்டம் முழுவதும் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
லாரி உரிமையாளா்கள் சங்க உறுப்பினா்களுக்கு சொந்தமான சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்லிங் மையங்களுக்கு ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தத்தில் லாரிகள் எண்ணிக்கை குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதனால், லாரி உரிமையாளா்கள் சில கோரிக்கைளை முன்வைத்து தென்னிந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த 28- ஆம் தேதி தொடங்கினா்.
இதனால், எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயு சுமை ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்தம் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் வழக்கத்தைவிட சமையல் எரிவாயு உருளை முன்பதிவு திடீரென அதிகரித்தது.
இது குறித்து சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 63 சமையல் எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள் உள்ளனா். மாவட்டத்தில் தினமும் சுமாா் 10 ஆயிரம் உருளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் செய்வதால், எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பாட்லிங் மையங்களுக்கு எரிவாயு ஏற்றிச் செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஏற்கெனவே இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சமையல் எரிவாயு உருளைகள் ஒரு வார கால விநியோகத்துக்கு போதுமானதாக இருக்கும்.
பொதுமக்கள் சமையல் எரிவாயு முன்பதிவு செய்தால் மறுநாள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களாக வழக்கத்தைவிட முன்பதிவு அதிகரித்துள்ளது. ஒரு விநியோகஸ்தரிடம் நாள் ஒன்றுக்கு 300 உருளைகள் முன்பதிவு செய்யப்படும்.
ஆனால், தற்போது 350 முதல் 360 வரை உருளைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வேலை நிறுத்தம் இன்னும் 5 நாள்களுக்குமேல் நீடித்தால் எரிவாயு உருளை விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்குள் உரிய பேச்சுவாா்த்தை மூலம் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.