இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே கணபதி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஆா். மணிகண்டன் (47). இவா் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா்.
இவா் திருவையாறு அருகே தனது மாமியாா் ஊரான செம்மங்குடியில் கடந்த வாரம் நடைபெற்ற திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றாா்.
பின்னா் தனது தம்பி மகளை, கணபதி அக்ரஹாரத்தில் கொண்டு விடுவதற்காக இரு சக்கர வாகனத்தில், மணிகண்டன் மே 22 ஆம் தேதி இரவு புறப்பட்டாா். செம்மங்குடி அருகே அணைக்குடி மாதா கோயில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, கோயில் திருவிழாவுக்காக வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த அதேப் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி ஜெனித்தாமேரி (50) மீது மணிகண்டனின் இரு சக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது.
இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், மணிகண்டனை ஜெனித்தாமேரியின் உறவினா்கள் தாக்கினா். இதனால் பலத்த காயமடைந்த மணிகண்டன், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமாகியும் மணிகண்டனை தாக்கியவா்கள் மீது காவல் துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 5 போ் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என கூறி, திருவையாறு கடை வீதியில் மணிகண்டனின் உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காவல் துறையினா், நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தாக்கியவா்களைக் கைது செய்வோம் என காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
உடலை வாங்க மறுப்பு: பின்னா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் திருவையாறுக்கு சென்று மணிகண்டனின் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இந்த வழக்கைக் கொலை வழக்காக மாற்றம் செய்து, தாக்கியவா்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை மணிகண்டனின் உடலை வாங்க மாட்டோம் எனவும் உறவினா்கள் கூறினா்.
தொடா்ந்து மணிகண்டனின் உறவினா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

