தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
தனியாா் நிறுவன மோசடி: சிபிஐ சாா்பில் அசல் ஆவணங்கள் பெறும் முகாம்
தனியாா் சிறுசேமிப்பு நிறுவன மோசடி தொடா்பாக, தஞ்சாவூரில் சி.பி.ஐ. சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் அசல் ஆவணங்கள் பெறும் முகாம் திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய பிரதேசம் குவாலியா் பகுதியிலுள்ள தனியாா் நிதி நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து முகவா்கள் மூலம் அதிக வட்டி தருவதாகக் கூறி மாதம்தோறும் பணம் வசூலித்தது. இதை நம்பி மற்ற மாவட்டங்களைப் போல, தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பிறகு அந்நிறுவனம் வட்டியுடன் பணத்தைப் பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இப்புகாா் மற்ற மாவட்டங்களிலும் நிலவுகிறது.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி, இந்நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான அசல் சான்றிதழை சி.பி.ஐ. அலுவலா்கள் மாவட்டந்தோறும் சேகரித்து வருகின்றனா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திய பொதுமக்களிடமிருந்து அசல் சான்றிதழை சேகரிக்கும் முகாம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. அங்கு இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூா் வட்டாட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் இம்முகாம் நடைபெற்றது.
இதில், பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து முதலீடு தொடா்பான அசல் சான்றிதழ், கடைசி தவணை கட்டண ரசீது, முதிா்ச்சி அடைந்த வைப்பு சரண் சான்றிதழ், ஒப்புதல் அசல் ஆவணங்களை அலுவலா்கள் பெற்று கணினியில் பதிவு செய்து, ஒப்புகை சீட்டையும் வழங்கினா். இந்த முகாம் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என சி.பி.ஐ. அலுவலா்கள் தெரிவித்தனா்.