உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் ...
``தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம்; திமுக ஆதரிக்க வேண்டும்"- நயினார் நாகேந்திரன் கோரிக்கை
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியும் தங்கள் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.
அது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து INDIA கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.
தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது, தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.
இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
2022-ல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பட்நாயக்குக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் தி.மு.க-விற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுகும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு முதல்வர் மு. க. ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.