தமிழகத்தில் இன்றுமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், திங்கள், செவ்வாய் (ஜூலை 14, 15) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஜூலை 16, 17-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கம், ஜஸ் ஹவுஸ், நெற்குன்றம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. வடபழனி, அமைந்தக்கரை (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூா்), சென்னை சென்ட்ரல், நந்தனம், நுங்கம்பாக்கம் (சென்னை) - 30 மி.மீ. மழை பதிவானது.
வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை - 102.38, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.84, திருச்சி - 101.3, கடலூா், மதுரை நகரம் - 101.12, பரமத்தி வேலூா் - 100.4 டிகிரி என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஜூலை 14-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே பல்வேறு இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 14) சென்னை, புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.