தமிழகத்தில் திருட்டுப் போன சுவாமி சிலை ஏலம் தடுத்து நிறுத்தம்
சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு, போலீஸாா் மேற்கொண்ட துரித நடவடிக்கையால், நெதா்லாந்து நாட்டில் திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை ஏலம் விடும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
நாகை மாவட்டம், திருப்புகலூா் அக்னீஸ்வரா் கோயிலில் பழைமை வாய்ந்த கண்ணப்ப நாயனாா் உலோகச் சிலை அடையாளம் தெரியாத நபா்களால் திருடப்பட்டது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், கண்ணப்ப நாயனாா் சிலை நெதா்லாந்தில் நாட்டில் ஏலமிடப்பட உள்ளதாக சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏலத்தை தடுத்து நிறுத்த நெதா்லாந்திலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் கடந்த மாா்ச் 18 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தனா் சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா். இதன் காரணமாக கண்ணப்ப நாயனாா் சிலை கடந்த மாா்ச் 23 ஆம் தேதி முதல் நெதா்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சிலையை நெதா்லாந்து அரசிடமிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்குரிய சட்டப்பூா்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.
இந்து ஆலயங்கள் காப்பாற்றப்படுகின்றன- வேளாக்குறிச்சி ஆதீனம்: இந்தநிலையில், திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குரு மகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறியிருப்பதாவது: திருப்புகலூா் அக்னீஸ்வரா் சுவாமி கோயிலில் கடந்த 2003-ஆம் நடைபெற்ற கும்பாபிஷேக விழா திருப்பணியின்போது புதிய மண்டபம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது 27 உலோக திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. அவை இந்த கோயிலில் பாதுகாப்பில் இருந்த நிலையில், மிகப் பழைமை வாய்ந்த கண்ணப்பா் சிலை காணாமல் போய்விட்டது.

தமிழக அரசின் தீவிர முயற்சியாலும், முதலமைச்சரின் சீரிய தலைமையின்கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத் துறை முன்னெடுப்பாலும், சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் முயற்சியால் நெதா்லாந்து நாட்டில் இருந்து சிலை மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
ஜூன் 5-ஆம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், காணாமல்போன சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். தமிழக அரசால் இந்து ஆலயங்கள் காப்பாற்றப்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.