இன்றைய வர்த்தகத்தில் உயர்ந்த மற்றும் சரிந்த பங்குகள்!
பெஞ்ச்மார்க் குறியீடு சென்செக்ஸ் 106 புள்ளிகள் உயர்ந்து 80,747 ஆகவும், நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து 24,414.40 ஆகவும் நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தை மிட்கேப் குறியீடு 1.3% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 1% அதிகரித்தது. துறை வாரியாக எஃப்எம்சிஜி மற்றும் பார்மா தவிர அனைத்து முக்கிய குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன.
ஆட்டோமொபைல், மீடியா, ரியாலிட்டி மற்றும் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் ஆகிய துறை பங்குகள் சுமார் 1% உயர்ந்தன. நிச்சயமற்ற நிலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகள் வாங்குவதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
ஏதர் எனர்ஜி
மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஏதர் எனர்ஜி பங்குகள் பட்டியலிடப்பட்ட ஒரு நாளில் 9 சதவிகிதம் உயர்ந்தது நிறுவனத்தின் சந்தை மதிப்பை ரூ.11,266.90 கோடியிலிருந்து ரூ.11,762.28 கோடி ரூபாயாக அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ்
இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4.47 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது. வணிக வாகன வணிகத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் ஆகிய முடிவால் நிறுவனத்தின் பங்குகள் ஏற்றம் கண்டது.
எம்.ஆர்.எஃப்.
4-வது காலாண்டு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, எம்.ஆர்.எஃப். பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்தது. அதே வேளையில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 29 சதவிகிதம் அதிகரித்து ரூ.512 கோடியாக இருந்தது.
2025ல் நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.229 அறிவித்துள்ளது எம்.ஆர்.எஃப்.
இந்தோஸ்டார் கேபிடல் ஃபைனான்ஸ்
மோதிலால் ஓஸ்வாலின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்தோஸ்டார் கேபிடல் ஃபைனான்ஸ் பங்கின் விலையில் 3 சதவிகிதம் உயர்ந்தது.
ஃபெடரல் வங்கி
மோதிலால் ஓஸ்வாலின் பரிந்துரையைத் தொடர்ந்து ஃபெடரல் வங்கி பங்குகள் இன்றைய அமர்வில் 2 சதவிகிதம் உயர்ந்தது.
ஏசியன் பெயிண்ட்ஸ்
ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் அதன் 4-வது காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக இன்றைய வர்த்தகத்தில் 3.5 சதவிகிதம் சரிந்தது.
ஹெச்.பி. ஸ்டாக்ஹோல்டிங்ஸ்
ஹெச்.பி. ஸ்டாக்ஹோல்டிங்ஸ் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 95.06 சதவிகிதம் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த வீழ்ச்சி பதிவானது.
கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்
மார்ச் 2025ல் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ.66.76 கோடி என்று அறிவித்த போதிலும், கிராஃப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் பங்குகள் இன்று சுமார் 3 சதவிகிதம் சரிந்தது.
ஜென்சோல் இன்ஜினியரிங்
கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஜென்சோல் மற்றும் ப்ளூஸ்மார்ட் மீது விசாரணை நடைபெறும் என்ற அறிப்பை தொடர்ந்து, அதன் பங்குகள் இன்று 5 சதவிகிதம் சரிந்தது.
டிஸ்டில்லரி
ராடிகோ கெய்தான், பிக்காடிலி அக்ரோ ஆகிய 2 இந்திய டிஸ்டில்லரி பங்குகள் இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தால் 5 சதவீதம் வரை சரிந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!