சென்செக்ஸ், நிஃப்டி அதிக ஏற்ற-இறக்கத்துடன் முடிவு!
மும்பை: ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது.
இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை தாக்குதல்களை நடத்தியது. இதற்கிடையில் நாடு முழுக்க போர் ஒத்திகை தொடங்கி நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இரண்டு வாரங்களுக்குப் பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு அதிரடி காட்டியுள்ளது.
இன்றைய ஆரம்ப வர்த்தகத்தின் போது சந்தைகள் தீவிர ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,844.63 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 79,937.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. நிஃப்டி அதிகபட்சமாக 24,449.60 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 24,220 புள்ளிகளையும் தொட்டது.
இதனையடுத்து சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தும் டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தன.
ஆட்டோ, மெட்டல் மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் உயர்ந்த நிலையில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சிறப்பாக செயல்பட்டது. பார்மா மற்றும் எஃப்எம்சிஜி பங்குகள் சரிந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.3,794.52 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தையில் தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 சரிந்து முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
இதையும் படிக்க: பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு