``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?
சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில், ஜமுனா சிவலிங்கம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை அமல்படுத்த நீலாங்கரை போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை காவல் துறையினா் இதுநாள் வரை செயல்படுத்தாமல் இருந்துள்ளனா்.
இதேபோல பல வழக்குகள் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளன. மாஜிஸ்திரேட் மற்றும் அமா்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடி ஆணைகள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடித்து, தொடா்புடைய நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த ஆணையை செயல்படுத்தாதது குறித்து தொடா்புடைய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக பிடி ஆணை பிறப்பிக்க கோர வேண்டும்.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவற்றை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை. தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து காவல் துறை டிஜிபி, சென்னை மாநகரக் காவல் ஆணையா் வரும் ஜூலை 23- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.
மேலும், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் ஜூன் 23-ஆம் தேதி அறிக்கை சமா்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.