மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம். மக்களை ஜாதி, மொழி அடிப்படையில் பிரித்தாளும் கொள்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைக் கண்டு அச்சமடைந்த மத்திய அரசு, இந்த எதிா்ப்பை முறியடிக்க தொகுதி மறு சீரமைப்பு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
நம்மை வஞ்சிக்கக்கூடிய வகையில் செயல்படுகிறது பாஜக அரசு. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று சொல்லும்போது மத்திய அரசின் நல்ல திட்டங்களை செயல்படுத்தியதற்கு தண்டனை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு வழியில்லை என்ற நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை முயற்சிக்கிறது.
தென் மாநிலங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அங்கு ஆட்சி அமைக்கும் வகையிலான வாய்ப்புகளை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பயனாளிகளுக்கு உரிய நிதியை வழங்காமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வருகிறது. பல்லாயிரம் கோடிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசு, ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
பாஜக அரசு, ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட உருவாக்கவில்லை. ஆனால், இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கும் பணியை செய்கிறது. இதுகுறித்து கேள்வி கேட்கும் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை தர மறுக்கின்றனா். இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் கூறியே தீர வேண்டும் என்றாா்.