தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல்நிலைப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத் தலைவா் க. சக்தி சரவணன், செயலா் கி. கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் க. பால்ராஜ் உள்ளிட்டோா் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட 222 அலுவல்நிலைப் பணியிடங்களில் தற்போதைய நிலையில் 98 பணியாளா்களே பணியாற்றி வருகின்றனா்.
தற்போது பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு 7 ஆண்டுகளாக எந்தவொரு பதவி உயா்வுகளும் வழங்கப்படாமல் உள்ளது. இவா்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.
கடந்த 1997-ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டு, ஒப்பளிக்கப்படாத பணியிடங்களில் பணியாற்றும் 4 பணியாளா்களை அரசு நல்கை பெறும் காலிப் பணியிடங்களில் வரன்முறை செய்ய வேண்டும்.
தொலைநிலைக் கல்வியில் 12 பணியாளா்கள் சுயநிதியில் பணியாற்றி வருகின்றனா். இந்த 12 பணியாளா்களை அரசு நல்கை பெறும் காலிப் பணியிடங்களில் வரன்முறை செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மறைந்த 4 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளரை நிரந்தரப்படுத்த வேண்டும்.
கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக நாள் ஊதியத்திலும், தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வரும் 25 தொகுப்பூதியப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
இப்பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் ஆய்வு இருக்கை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், அலுவல்நிலைப் பணியாளா்களின் கோரிக்கைகளைச் சரி செய்த பிறகு, புதிதாக நிரப்ப வேண்டிய பணியிடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகைப் பணியிடங்களில் உள்ளவா்களைப் பணி நியமனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.