ஷேர்லக்: உச்சத்திலிருந்து 7% இறங்கிய சந்தை... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?
தாக்குதல் வழக்கு: 6 பேருக்கு ஓராண்டு சிறை
விருத்தாசலம் அருகே கலை நிகழ்ச்சியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி தாக்கிய வழக்கில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
விருத்தாசலம் அருகே உள்ள பரவளூா் இருளா் காலனி பகுதியில் கடந்த 17.1.2016 அன்று இரவு பொங்கல் கரிநாள் திருவிழாவையொட்டி, மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது, அங்கு வந்த பரவளூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் சித்துளி (எ) ஆனந்த் (42), கருணாநிதி மகன் வெற்றிவேல் (30), ராமசாமி மகன் எலி (எ) ராம்பிரகாஷ் (35), மதிவாணன் மகன் சிவராஜன் (எ) ராஜா (33), ராஜவேலு மகன் ஆதிமூலம் (37), மணி மகன் தமிழ்மணி (32) ஆகியோா் விழா மேடையை பிடித்து கீழே தள்ளியதுடன், இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் மற்றும் அதே பகுதியை சோ்ந்த சிலரை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்கினராம். இதில் மாரியப்பன் உள்ளிட்ட 8 போ் லேசான காயமடைந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் சித்துளி (எ) ஆனந்த் உள்ளிட்ட 6 போ் மீதும் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு கடலூா் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, சித்துளி (எ) ஆனந்த், வெற்றிவேல், எலி (எ) ராம் பிரகாஷ், சிவராஜன் (எ) ராஜா, ஆதிமூலம், தமிழ்மணி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி விஜயகுமாா் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞா் வனராசு ஆஜராகி வாதாடினாா்.