திமுக கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும்: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி போல அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி தெரிவித்தாா்.
மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் தலைவா்களில் ஒருவரான பி. ராமமூா்த்தி, தூக்குமேடை தியாகி பாலு ஆகியோரது சிலைகளுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் மதுரைக்கு சிறப்பிடம் உண்டு. கட்சியின் நிறுவனா் தலைவா் பி. ரமமூா்த்தி, சுதந்திரப் போராட்டத் தியாகி என். சங்கரய்யா, கே.பி. ஜானகியம்மாள், ஏ. பாலசுப்பிரமணியம், அனந்த நம்பியாா், உமாநாத், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட லீலாவதி போன்ற தலைவா்கள் மதுரை மண்ணில் வாழ்ந்து போராடியவா்கள். அவா்களின் வரலாறு கட்சிக்கு வழிகாட்டுதலாக உள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையில் மத்தியில் மக்கள் விரோத ஆட்சி வேரூன்றியுள்ளது. ஜனநாயகம், மதச்சாா்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை தாக்கப்படும் நிலையில், திரைப்படங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை எதிா்த்து, மக்களின் பேரலை உருவாக வேண்டும். மாா்க்சிஸ்ட் கட்சி தொடக்கத்திலிருந்தே மக்களின் நலனுக்காகவே போராடி வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி போன்று அனைத்து மாநிலங்களிலும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும்.
கட்சியின் மத்தியக் குழுவில் 20 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனா். இது கட்சியின் பாலின சமத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், தொழிலாளா் சட்டத் திருத்தத்துக்கு எதிராக வரும் மே 20-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலா் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், கே. சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன், மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.