திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்
தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
பேரறிஞர் அண்ணாவின் வழியில் எதிர்வரும் சவால்களை சந்தித்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை வழங்குவோம். அனைத்து நிலைகளில் இருந்தும் அதிமுக தோழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவிடத்திலிருந்து உறுதி ஏற்கிறோம். அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை கடைப்பிடித்து நடந்திருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை தந்திருக்க மாட்டார்கள்.
மத்திய அமைச்சர் அமித்ஷா திருமண வரவேற்புக்காக வந்திருந்தார். அதில் கலந்து கொண்டேன். ஓ.பி.ரவீந்திரநாத்தின் பதிவு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறோம். யார் அந்த சார் என்பது குறித்து எல்லாரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதனைத் தீவிர புலன் விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டிய நிலையிலிருந்து ஆளுங்கட்சி வெளிப்படுத்த வேண்டும்.
செல்போனை பறிமுதல் செய்வதும், வன்முறையும், அதிகார துஷ்பிரயோகங்களும் தீர்வாகாது. இசிஆர் விவகாரத்தில் யார் குற்றவாளிகள் என விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இசிஆர் விவகாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்தவர்கள் என்ற உண்மை எல்லாருக்கும் தெரியும்.
விஜய் அரசியல் இயக்கம் தொடங்கி ஓராண்டு முடிவடைந்துள்ளது. அவர் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை. தெளிவாக அவரது கொள்கைகளை, கோட்பாடுகளைச் சொன்னால் அதற்கு குறித்து கருத்துக்களைத் தெரிவிப்போம். அரசியல் கட்சி ஆரம்பிக்கின்ற அனைவரும் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம், முதலமைச்சர் ஆக போகிறோம் என்று கூறுவார்கள். அதைத் தீர்மானிப்பது மக்களின் கடமை.
ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது, என்றார்.