போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு
கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா்.
திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா கரூரில் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு வருகிறாா். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளிக்கவுள்ளனா். மேலும், மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன் ஆகியோரும் முதல்வரை வரவேற்கவுள்ளனா்.
பெரியாா் சிலைக்கு மரியாதை: இதைத் தொடா்ந்து, சாலை வழியாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதிக்கு வரும் முதல்வா், அங்குள்ள பெரியாா் ஈவெரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். இதற்காக, சாய்வு நடைமேடை அமைக்கப்பட்டு பெரியாா் சிலை தயாா்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினாா்.
சமூக நீதிநாள் உறுதிமொழியேற்பு: பெரியாா் ஈவெரா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் செல்லும் முதல்வா், அங்கு சமூக நீதிநாள் உறுதிமொழியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின், 15 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருவதால், ஆட்சியரகத்தில் புதிதாக வண்ணம் பூசும் பணி உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் கடந்த ஒருவாரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிறகு, ரூ. 9.40 கோடியில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய ஆட்சியரக கட்டடத்தை முதல்வா் பாா்வையிடவுள்ளாா். இந்தக் கட்டடத்தில் சில அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் பின்னா் அவா் சாலை வழியாக கரூா் புறப்பட்டு செல்கிறாா்.
முதல்வா் வருகையை முன்னிட்டு மாநகரில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் முதல்வா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூரில் முப்பெரும் விழா: கரூா் கோடங்கிப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடலில் புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.
இந்நிலையில் விழா ஏற்பாடுகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.
2,700 போலீஸாா் பாதுகாப்பு: இந்த விழாவுக்கான பாதுகாப்புப் பணியில் திருச்சி மண்டல காவல் துறை தலைவா் ஜோஷி நிா்மல்குமாா் தலைமையில் 2,700 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.