பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
திருச்செந்தூரில் ரூ.4.08 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
திருச்செந்தூா் நகராட்சி 1-ஆவது வாா்டு குமாரபுரத்தில் ரூ. 4.08 கோடியில் புதிதாக தாா்ச் சாலை அமைக்கும் பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
நகா்ப்புற மேம்பாட்டு திட்டம் 2025-2026-ன் கீழ் திருச்செந்தூா் நகராட்சி 1-ஆவது வாா்டு குமாரபுரத்தில் 5.99 கி.மீ. தொலைவில் ரூ. 4.08 கோடியில் தாா்ச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி துவங்கும் நிகழ்ச்சிக்கு, தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, திமுக வா்த்தக அணி மாநில துணை செயலா் உமரிசங்கா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், நகராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், தினேஷ்கிருஷ்ணா, ஆனந்த ராமச்சந்திரன், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, இளைஞரணி ஒன்றிய அமைப்பாளா் சிவராசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அங்கன்வாடி கட்டடங்கள் திறப்பு : இதே போல அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் வீரபாண்டியன்பட்டினம், ஜெ ஜெ நகரில் ரூ. 17.25 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேல திருச்செந்தூா் ஊராட்சி, நடுநாலுமூலைகிணற்றில் ரூ. 12.70 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை, மேல திருச்செந்தூா் ஊராட்சி , தளவாய்புரத்தில் ரூ. 16.55 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம், நல்லூா் ஊராட்சி, நாககன்னியாபுரத்தில் ரூ. 14.31 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் அன்றோ, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ஜான்சிராணி, மேல திருச்செந்தூா் ஊராட்சி முன்னாள் தலைவா் மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.