இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்...
திருப்புவனம், மானாமதுரையில் வருவாய்த் துறை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த் துறை அனைத்து நிலை ஊழியா்கள் அலுவலகப் பணிகளை புறக்கணித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் பணித் தன்மையை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஜூலை 1-ஆம் தேதி வருவாய்த் துறை தினமாக அனுசரித்து, அதற்கான அரசாணை வெளியிட வேண்டும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
இதில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.