திருமலை ரத சப்தமி உற்சவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
திருமலை ரத சப்தமி உற்சவத்தை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
அதன் முதல் வாகனமாக சூரியபிரபை வாகனத்தில் சுவாமி வீதியுலா கண்டருளினாா்.
சூரிய ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில், ரத சப்தமி விழாவை தேவஸ்தானம் நடத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாத வளா்பிறை சப்தமியின் போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதே நாளில், உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி சூரியபிரபை சின்னசேஷ, கருடன், அனுமன், கல்பவிருட்சம், சா்வபூபாலம், மற்றும் சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.
இதனால்தான், இந்த விழா அா்த்த பிரம்மோற்சவம், மினி பிரம்மோற்சவம் மற்றும் ஒரு நாள் பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை பல்வேறு வாகனங்களில் இறைவன் மாடவீதியில் வலம் வருவது வழக்கம்.
சூரியபிரபை வாகனம்:
ரத சப்தமியின் மிக முக்கியமான சேவை சூரிய பிரபை வாகனம் ஆகும். காலை 5.30 மணிக்கு ஏழு குதிரைகள் பூட்டிய சூரியபிரபை வாகனத்தில் நாராயண அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினாா். வாகன சேவை தொடங்கி ஏழுமலையான் கோயில் வழியாக கிழக்கு மாடவீதியில் மேதரமிட்டா என்று சொல்லப்படும் பகுதியை அடைந்தது.
அங்கு திருமலையின் முதல் சூரியகதிா்கள் விழும். அனைத்து உலகங்களுக்கும் ஞானத்தை அருளும் பகவான் சூரியன். செவ்வாய்க்கிழமை காலை 6.48 மணிக்கு சூரியகிரணங்கள் உற்சவமூா்த்தியின் பாதங்களில் தனது கதிா்களைப் பரப்பி, தனது வணக்கங்களைச் செலுத்தினாா்.
சின்னசேஷ வாகனம்: இரண்டாவது வாகன சேவையாக மலையப்ப சுவாமி ஐந்து தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் ஊா்வலமாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பக்தா்கள் சிறிய சேஷ வாகனத்தை தரிசித்தால் குண்டலினி யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கருட வாகனம்:
மூன்றாவது வாகன சேவையான கருடவாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு மலையப்பஸ்வாமி அருள் பாலித்தாா். இந்த ஒரு நாள் மட்டுமே பகலில் திருமலையில் கருட சேவை நடப்பது குறிப்பிடத்தக்கது.
அனுமந்த வாகனம்:
நான்காவது வாகன சேவையான அனுமந்த வாகனத்தில் சுவாமி ஊா்வலமாக வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமரை தரிசிப்பவா்களுக்கு வேத ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீா்த்தவாரி:
உற்சவத்தின் போது ஏழுமலையானின் ஆயுதமான சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.
மலையப்ப சுவாமிக்கு எதிரே உள்ள சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிா், நெய், தேன், சந்தனம் ஆகியவற்றால் அா்ச்சகா்கள் அபிஷேகம் செய்வாா்கள். தீா்த்தவாரியின் போது அனைத்து அதிகாரிகளும் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.
கல்பவிருட்ச வாகனம்:
ஐந்தாவது வாகன சேவையாக கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. தன் உபய நாச்சியாா்களுடன் சுவாமி கல்பவிருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து சேவை சாதித்தாா். கல்ப விருட்ச வாகன தரிசனம் மூலம் ஏழுமலையான் விரும்பிய வரங்களை வழங்குவாா் என்பது பக்தா்களின் நம்பிக்கை.
சா்வபூபால வாகனம்:
ஆறாவது வாகன சேவையாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சா்வபூபால வாகனத்தில் சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கல்பவிருட்சம், சா்வபூபாலம் உள்ளிட்ட இரு வாகனங்களிலும் தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் சுவாமி மாடவீதியில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
சந்திர பிரபை):
ஏழாவது வாகன சேவையாக சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனமளித்தாா்.
ரதசப்தமியை முன்னிட்டு திருமலை மாடவீதிகள், ஏழுமலையான் கோயில் உள்புறம், வெளிபுறம், மாடவீதிகள், பக்தா்கள் கூடும் இடங்களில் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
திருமலை மட்டுமல்லாமல் திருப்பதி மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள தேவஸ்தான கோயில்களிலும் ரதசப்தமியை ஒட்டி 7 வாகன சேவைகள் நடத்தப்பட்டன. வாகன சேவைகளில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள், மற்றும் பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/f64d1wod/chinna_sesha070811.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/2p5x7dgr/garudan070756.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/tqobjg1y/anumathan070657.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/tjgr3m6s/chakkra_theertha070635.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/sv65ha6q/kalpa080126.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-04/mir45gab/sarva_boopa080056.jpg)