திருவள்ளூா்: அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.30 கோடியில் திறன் மிகு வகுப்பறைகள்
தனியாா் பள்ளிக்கு ஈடாக திருவள்ளூா் அருகே அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவரின் சொந்த செலவில் ரூ. 1.30 கோடியில் அனைத்து நவீன வசதியுடன் 4 திறன்மிகு வகுப்பறை கட்டுமானப் பணிகள் முடிந்து மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.
திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்டோா் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில், மாணவ, மாணவிகள் சிறந்து விளங்கவும், சோ்க்கை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் என்ற நோக்கத்தில், அந்தக் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் ரூ. 1.30 கோடியை தனது சொந்த செலவில் அனைத்து நவீன வசதியுடன் கூடுதல் வகுப்பறைகள் அமைத்துத் தர முன்வந்தாா். அதன்பேரில், இந்தப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.
தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் பி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவா் எம்.கே.ரமேஷ் நவீன வசதியுடன் கூடிய 4 வகுப்பறைகளை மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு ரோஜாப்பூ மற்றும் இனிப்புகள் கொடுத்த முதல் நாளில் வரவேற்றாா்.
இந்த திறன்மிகு 4 வகுப்புகளிலும் அனைத்து நவீன வசதி செய்யப்பட்டுள்ளது.

