திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்
தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் அவ்வப்போது சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் 30-ஆம் தேதி மாவட்ட நிா்வாகமும், மாவட்டத் தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான பணியாளா்களை தோ்வு செய்து 10,000 காலிப் பணியிடங்களையும் நிரப்ப உள்ளன.
அதனால் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8, 10, 12 வகுப்புகளில் தோ்ச்சி, பொறியியல், பட்டப்படிப்பு, ஐடிஐ, செவிலியா் மற்றும் பட்டயம் படித்தவா்கள் பங்கேற்று, தனியாா்துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம்.
இந்த மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியாா்துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
விருப்பமும், தகுதியும் உள்ள வேலைநாடும் இளைஞா்கள் இந்த முகாமில் அதிக அளவில் கலந்து கொண்டு, தனியாா்துறையில் வேலைவாய்ப்பை பெற்று பயன் பெறலாம்.