பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
திருவான்மியூர் ஏடிஎம்-ல் திருட்டு: வெளியானது புதிய தகவல்!
சென்னை: சென்னை, திருவான்மியூரில் உள்ள வங்கி ஏடிஎம் ஒன்றில், பணத்தைத் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏடிஎம்களில் கருப்பு அட்டை ஒட்டி பணத்தைத் திருடி வந்த வடமாநிலக் கும்பலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னைக்கு வார இறுதி நாள்களில் மட்டும் வந்து, ஏடிஎம்களில் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் செல்வதும், வார இறுதி நாள்களில்தான் அதிகம் பேர் ஏடிஎம்கள் வந்து பணம் எடுப்பதாகவும், அதனால் வார இறுதி நாள்களை குறி வைத்து இங்கே வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏடிஎம்களில் கள்ள சாவி போட்டு ஏடிஎம் இயந்திரத்தைத் திறந்து, அதில் பணம் வெளியே வரும் இடத்தை மட்டும் கருப்பு அட்டை ஒட்டி மறைத்து மீண்டும் இயந்திரத்தைப் பூட்டிவிட்டு, பணத்தை திருடுவதை வழக்கமாகச் செய்து வந்துள்ளனர். சென்னை ஏடிஎம்களில் ஒவ்வொரு முறையும் பணத்தை திருடிவிட்டு ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் தப்பிச் சென்று விடுவதும் தெரிய வந்துள்ளது.
இந்த ஏடிஎம் பணத் திருட்டுச் சம்பவம் குறித்து மும்பையில் உள்ள எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்துக்கு வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு துறை நிபுணர்கள், காவல்துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரும் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
யாரேனும் பணம் எடுக்க ஏடிஎம் இயந்திரத்துக்கு வந்தால், பணம் வெளியே வராது. இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிடுவார்கள். பிறகு, இவர்கள் உள்ளே சென்று, அந்த அட்டையை எடுத்துவிட்டு பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
இதுபோல பல ஏடிஎம் இயந்திரங்களில் கருப்பு அட்டையை வைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் இருந்த சிசிடிவி கருவியில் பதிவான காட்சிகளை அலசி ஆராய்ந்தபோதுதான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.