தில்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு! ஹாங்காங்கில் அவசர தரையிறக்கம்!
ஹாங்காங்கில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ஹாங்காங்குக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு இன்று காலை ஏர் இந்தியாவின் ஏஐ315 பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்தில் நடுவானில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹாங்காங் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருக்கிறதா என்று வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏர் இந்தியாவின் ஏஐ315 விமானமும் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.