தீபாவளி: கோ -ஆப்டெக்ஸ் ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு
திருவாரூா்: திருவாரூரில், கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 42 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை, திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவா் தெரிவித்தது:
கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டான் சேலைகள், கூைாடு புடவைகள், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 ஆவது மாத சந்தா தொகையை கோ -ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 சதவீத தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.
திருவாரூா் விற்பனை நிலையத்தில் 2024-இல் தீபாவளிக்கு ரூ.36 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளிக்கு ரூ.42 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என்றாா்.
நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்தியா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ. நாகராஜன், மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) கே.எம். கோபி, திருவாரூா் கோ -ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் சுமதி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியா்கள் பங்கேற்றனா்.