ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ
`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பங்கேற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதலமைச்சர் செயல்படுவார் என தி.மு.க அரசு கொண்டாடி வந்த நிலையில், துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு இருப்பதாகவும் கவர்னரே வேந்தராக தொடர்கிறார் எனவும் ஆளுநர் மாளிகை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு..!
இதனால், `மாநாட்டில் பங்கேற்பதா வேண்டாமா’ என்ற குழப்பத்தில் துணை வேந்தர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியின. ஆனால், மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பெரும்பாலான துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். துணை வேந்தர்களுக்கு பதிலாக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
நண்பகல் 12 மணியளவில் மாநாடு தொடங்கிய நிலையில் தொடக்க உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி , " கல்வி வளர்ச்சி, உயர் கல்வி மேம்பாடு போன்ற நல்ல நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரையும் பங்கேற்க விடாமல் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியிருக்கிறது. துணை வேந்தர் ஒருவரின் வீட்டிற்கேச் சென்று மிரட்டியிருக்கிறார்கள். மற்றொரு துணை வேந்தரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர் " என தமிழ்நாடு அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.