Seeman: "அதிமுக கூட்டணி; துணை முதல்வர் பதவி; ஆதவ் கொடுத்த வாக்கு" - ரகசியம் சொல்...
தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.
தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலைகளுக்கு இடம் பிடித்துக் கொடுப்பது மற்றும் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவியான முத்துமாடத்தி என்பவருக்கு ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் 4.5 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த நிலத்தை முருகேசன், மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்துவிடம் தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

இதற்கு முத்துமாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர் மறுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி மாடத்தி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோர் திருச்செந்தூர் கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதி கெட்டான் ஓடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும் போது காரில் வந்த அயிரவன்பட்டி முருகேசன், ”இடத்தைக் கேட்டால் தர மறுப்பாயா? உன்னை என்னைச் செய்கிறேன் பார்” எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக முத்துமாடத்தி, முருகேசன் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து முத்தையாபுரம் போலீஸார் முருகேசன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கை தி.மு.க மேலிடத்தின் உத்தரவுப்படியே நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓட்டப்பிடாரம் பகுதி தி.மு.கவினரிடம் பேசினோம், “ஓட்டப்பிடாரத்தைப் பொறுத்தவரையில் எம்.எல்.ஏ சண்முகையா ஒரு அணியாகவும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளரான இளையராஜா ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள்.

கொலை மிரட்டல் புகாரளித்த முத்து மாடத்தி இளையராஜாவின் அத்தை ஆவார். இளையராஜாவின் மாமாவான மாரிமுத்து பெயரிலிருக்கும் இளையராஜாவின் சிலோன்காலனி நிலத்தை அமோசா சோலார் நிறுவனத்துக்காக ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் கடந்த மார்ச்சில் புகார் கொடுக்கப்பட்டு எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டது.
முருகேசன், இளையராஜா இருவருமே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள். இதில் பல முறை இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தம்பி சண்முகையாவின் பெயரைச் சொல்லி தொழிலதிபர்களிடம் பண வசூல், கல்குவாரிகளில் பண வசூல், சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியது, சோலார் நிறுவனத்திற்காக விவசாய நிலங்கள் அபகரிப்பு எனப் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

முருகேசனின் அட்ராசிட்டியால் முதல்வர் ஸ்டாலினால் பலமுறை சண்முகையா எச்சரிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முப்பிலிவெட்டியைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி விக்னேஷ் உட்பட 4 பேர் சிலைகடத்தல் முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சண்முகையா மற்றும் முருகேசனின் பெயரும் அடிபட்டது.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY